தமிழகத்தில் பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ஆபத்தான ரசாயன நிறமூட்டிகள் (Artificial Colors) பயன்படுத்தித் தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களின் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கடைகளில் கண்ணைக் கவரும் வகையில் விற்கப்படும் இந்த கலர் அப்பளங்களை வாங்கிப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த செயற்கை நிறமூட்டிகள் கலந்த அப்பளங்களை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சனைகள், சிறுநீரகப் பாதிப்பு மற்றும் உயிருக்கே ஆபத்தான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன. முக்கியமாக, குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச்சிதறல் போன்ற மனநல பாதிப்புகள் இதனால் உண்டாகலாம். எனவே, நச்சுத்தன்மை வாய்ந்த இந்த கலர் அப்பளங்களைத் தவிர்த்து, பாரம்பரியமாக உளுந்து மற்றும் அரிசி கொண்டு இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அப்பளங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விதிமுறைகளை மீறி கலர் அப்பளங்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்! என்று எச்சரித்துள்ளது.





