“துயரம் முதல் தங்கம் வரை!” – காமன்வெல்த் போட்டியில் வரலாற்று சாதனை படைத்த ஷர்மிளா டாங்கர்!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்கத் தங்கம் ஒன்றை வென்று கொடுத்துள்ளார் 40 வயதான ஷர்மிளா டாங்கர். காமன்வெல்த் போட்டிகளில் பாரா-தடகளப் பிரிவில் இந்தியா தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. மேலும், இந்த மேடையில் ஏறிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

பெண்களுக்கான ஷாட் புட் (Shot Put F57) பிரிவில் பங்கேற்ற ஷர்மிளா, தனது மூன்றாவது முயற்சியில் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த வெற்றி வெறும் பதக்கம் சார்ந்தது மட்டுமல்ல; இது அவரது வாழ்நாள் போராட்டத்திற்கான அங்கீகாரம். ஹரியானாவைச் சேர்ந்த ஷர்மிளா, சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு இடது காலில் நிரந்தர ஊனத்தைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, துன்பகரமான திருமண வாழ்க்கை, தற்கொலை எண்ணம் எனப் பல சோதனைகளை அவர் எதிர்கொண்டார்.

ஆனால், விடாமுயற்சியால் மீண்டெழுந்த ஷர்மிளா, தனது கணவர் அஜித் சிங்கின் ஊக்கத்துடன் 34 வயதில் பாரா-தடகள விளையாட்டில் அடியெடுத்து வைத்தார். “எல்லோரும் ஓய்வு பெறும் வயதில் நான் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். 2020-ல் பயிற்சியாளர் டெக் சந்த் என்பவரிடம் பயிற்சி பெற்ற அவர், ஓராண்டிலேயே தேசிய சாம்பியனானார். 2022 காமன்வெல்த் போட்டியில் 4-வது இடத்தைப் பிடித்துத் தவறவிட்ட வாய்ப்பை, தற்போது விடாமுயற்சியால் தங்கம் வென்று ஈடுகட்டியுள்ளார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  968 நாட்கள் காத்திருப்புக்கு மரண மாஸ் எண்ட்ரி! இங்கிலாந்து மண்ணில் ஜடேஜா சாதனையை தவிடு பொடியாக்கிய பும்ரா!

பயிற்சிக்காகத் தனது சொந்த வீட்டை விற்ற ஷர்மிளா, இந்த வெற்றியின் மூலம் மீண்டும் புதிய வீட்டை வாங்கும் தனது கனவை நனவாக்க உள்ளார். அவரது இந்த அபாரமான உறுதி, தற்போது தேசிய அளவில் விளையாடும் அவரது இரு மகள்களுக்கும் பெரும் உந்துதலாக அமைந்துள்ளது.