நடுவானில் உடைந்த விமான ஜன்னல்! வெளியே இழுக்கப்பட்ட பயணியை கால்களை பிடித்து காப்பாற்றிய மனைவி!

கிரீஸில் இருந்து ஜெர்மனி நோக்கிப் பறந்த ரயான்ஏர் (Ryanair FR1879) விமானத்தில் நடுவானில் அரங்கேறிய நெஞ்சை பதறவைக்கும் விபத்து உலகையே உலுக்கியுள்ளது. விமானம் டேக் ஆஃப் ஆகி கொஞ்ச நேரத்திலேயே எதிர்பாராத விதமாக அதன் ஒரு இன்ஜின் பகுதி வெடித்துச் சிதறியுள்ளது. அந்த இன்ஜினில் இருந்து உடைந்த இரும்புத் துண்டு ஒன்று பயங்கர வேகத்தில் வந்து ஒரு பயணியின் ஜன்னல் இருக்கை கண்ணாடி மீது மோதியது. இதில் அந்த அக்ரிலிக் ஜன்னல் அடியோடு உடைந்து நொறுங்கியதால், விமானத்தின் உள்ளே இருந்த காற்று அழுத்தம் (Decompression) பயங்கர வேகத்தில் வெளியேறத் தொடங்கியது. அப்போது ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த 61 வயதான செர்பிய நாட்டுச் சுற்றுலாப் பயணியின் தலை மற்றும் தோள்பட்டை பகுதி அப்படியே ஜன்னல் வழியாக வெளியே இழுக்கப்பட்டது.

திடீரென டயர் வெடிப்பது போன்ற பெரும் சத்தம் கேட்டதால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு கண்விழித்தனர். விமானத்தின் மேலிருந்து ஆக்சிஜன் மாஸ்க்குகள் தானாகக் கீழே தொங்கின. அந்தப் பயணி ஜன்னல் வழியே பாதி உடல் வெளியே தொங்கிய நிலையில், அவரது மனைவி சாதுரியமாகச் செயல்பட்டு அவரது கால்களைப் பலமாகப் பிடித்துக் கொண்டார். உடனே அருகில் இருந்த மற்ற பயணிகளும் ஓடிவந்து அந்தப் பயணியை விபரீத காற்றின் வேகத்தை எதிர்த்து உள்ளே இழுத்துக் காப்பாற்றினர். நல்லவேளையாக அவர் சீட் பெல்ட் அணிந்திருந்ததாலும், சக பயணிகளின் உடனடி உதவியாலும் அவர் முழுமையாக வெளியே உறிஞ்சப்படுவது தடுக்கப்பட்டது.

இந்த விபத்தினால் அந்தப் பயணிக்குக் கழுத்து மற்றும் உடலின் சில பகுதிகளில் கடுமையான உராய்வுக் காயங்களும் (Friction Burns), அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை உடனடியாக கிரீஸின் தெசலோனிகி (Thessaloniki) விமான நிலையத்திற்குத் திருப்பி அவசரமாகத் தரையிறக்கினர். பாதிக்கப்பட்ட பயணி அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் சர்வதேச விமானப் போக்குவரத்து வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்ஜின் வெடித்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.