சென்னை தாம்பரம் பகுதியில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலர் ஒருவரை உயர் அதிகாரி பொது இடத்தில் கண்டித்ததால், அவர் நடுரோட்டில் கண்ணீர் விட்டு அழுத சம்பவமும், அவருக்குப் பொதுமக்கள் திரண்டு ஆறுதல் கூறிய நெகிழ்ச்சியான நிகழ்வும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாம்பரம் ராதாநகர் சிக்னல் (Radha Nagar Signal) சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் உயர் அதிகாரி ஒருவர், சாலையோரக் கடையில் நின்றுகொண்டிருந்த பெண் காவலரை அழைத்து, “இப்படி ஓரமாக நின்றுகொண்டிருந்தால் போக்குவரத்து எப்படி சீராகும்?” எனக் கேட்டு பொது இடத்தில் கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததாகத் தெரிகிறது.
உயர் அதிகாரியின் இந்தக் கண்டனத்தால் மனமுடைந்த அந்த பெண் காவலர், நடுரோட்டிலேயே நின்று விம்மி விம்மி அழத் தொடங்கினார். இதைக் கண்ட அங்கிருந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் உடனே அந்த பெண் காவலரைச் சுற்றித் திரண்டு அவருக்கு ஆதரவாக நின்றனர். “அழாதீங்கம்மா, நீங்க ஒரு போலீஸ், எல்லாரும் உங்களைச் ‘சிங்கப் பெண்’ என்று சொல்கிறார்கள், பணியில் இருக்கும்போது நீங்கள் இப்படி அழக் கூடாது” என்று கூறி பொதுமக்கள் அவருக்கு மிகுந்த பாசத்துடன் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.
அப்போது பொதுமக்களிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய பெண் காவலர், “நான் என் பையை இங்கே வைத்துவிட்டு, உட்காரக் கூட செய்யாமல் தொடர்ந்து நின்றுகொண்டுதான் இருக்கிறேன். தற்பொழுதுதான் இரண்டு சிறுவர்கள் எனக்குக் குடிக்கக் கூல்ட்ரிங்க்ஸ் (Cool Drinks) வாங்கிக் கொடுத்தார்கள், அதை வாங்கத்தான் நான் அங்கு நின்றேன். ஆனால் நான் காலையிலேயே ஏதோ வாங்கி குடிக்கிறேன் என்று தவறாக நினைத்துக் கொண்டு அதிகாரி என்னைக் கண்டித்துவிட்டார்” என்று அழுதுகொண்டே கூறினார். சிக்னல் பகுதியில் நிலவும் பணிச்சுமை மற்றும் அதிகாரிகளின் கண்டிப்புக்கு மத்தியிலும், பெண் காவலருக்குப் பொதுமக்கள் தங்களின் சொந்தக் குடும்ப உறுப்பினர் போலத் திரண்டு வந்து ஆறுதல் கூறிய இந்த மனிதநேயச் சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





