தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தனது தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு மருத்துவராகவும், அரசியல்வாதியாகவும் மக்கள் மத்தியில் தனக்கிருக்கும் செல்வாக்கை நிலைநாட்ட அவர் புதுமையான முறைகளைக் கையாண்டு வருகிறார்.
இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மயிலாப்பூர் தொகுதியின் நிலைமையை மருத்துவ ரீதியாக ஒப்பிட்டுப் பேசினார். “மயிலாப்பூரின் ஒவ்வொரு வீதியையும், ஒவ்வொரு சந்தையும் ஒரு மருத்துவராக நான் ஏற்கெனவே ஸ்கேன் செய்துவிட்டேன். இங்குள்ள மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் என்ன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கிறேன். பிரச்சினைகளைக் கண்டறிவது (Diagnosis) முடிந்துவிட்டது, இனி அவற்றுக்குச் சிகிச்சை (Treatment) அளிப்பதுதான் எனது வேலை,” என அதிரடியாக முழங்கினார்.
மேலும் பேசிய அவர், “மயிலாப்பூர் மக்கள் எனக்கு வாய்ப்பளித்தால், வெற்றி பெற்ற முதல் 100 நாட்களுக்குள்ளேயே நான் கண்டறிந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காண்பேன். இது ஒரு மருத்துவரின் வாக்குறுதி,” எனத் தெரிவித்தார். குடிநீர் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைநீர் வடிகால் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தனது “ட்ரீட்மென்ட்” பிளானில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இறுதிகட்டப் பிரச்சாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்துள்ள இந்த “100 நாள் அதிரடித் திட்டம்” மயிலாப்பூர் வாக்காளர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.