தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் பரப்புரையின் அடுத்தகட்டமாக நாளை (ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தவுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க விஜய் இந்த அதிரடி பயணத்தை மேற்கொள்கிறார்.
காரைக்குடியில் உள்ள புகழ்பெற்ற கண்ணதாசன் மணிமண்டபம் அருகே நாளை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ரோடு ஷோ நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் நான்கு மணி நேரம் நடைபெறும் இந்தப் பிரச்சாரத்தில், காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் வாக்கு சேகரிக்கவுள்ளார். இதற்காக மணிமண்டபம் பகுதியில் தவெக தொண்டர்கள் இப்போதே குவியத் தொடங்கியுள்ளனர்.

விஜய்யின் பயணத் திட்டம் குறித்து… வெளியாகியுள்ள தகவலின்படி, அவர் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்குச் செல்கிறார். மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடியை அடையும் அவர், பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீண்டும் மதுரை வழியாக சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த ரோடு ஷோவின் முக்கியத்துவம் என்னவென்றால்… காரைக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகள் பாரம்பரியமாக, மற்ற கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்டாலும், விஜய்யின் வருகை அங்குள்ள இளம் வாக்காளர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்கும் என தவெக நம்புகிறது. ஏற்கனவே நெல்லை மற்றும் சென்னையில் விஜய்யின் பிரச்சாரத்திற்குப் பெரும் கூட்டம் கூடிய நிலையில், காரைக்குடியிலும் அதே போன்ற எழுச்சியை ஏற்படுத்த அக்கட்சித் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.
நாளை மதியம் 12 மணிக்குத் தொடங்கும் இந்த ரோடு ஷோ காரணமாக, காரைக்குடி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால், பாதுகாப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்த காரைக்குடி விசிட் அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.