தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான 85 சதவீத வாக்குப்பதிவு குறித்துத் தனது அதிகாரப்பூர்வ அரசியல் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 ஏப்ரல் 23-ம் தேதி நடந்த இந்தத் தேர்தல், தமிழக வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “85% வாக்குப்பதிவு என்பதெல்லாம் இதுவரை தமிழ்நாடு காணாத ஒன்று. தேர்தல் திருவிழா என்றும் ஜனநாயகத் திருவிழா என்றும் சொல்லப்படுவதன் அர்த்தம் நேற்றுதான் (ஏப்ரல் 23) முழுமையாக உணரப்பட்டது. இது ஒரு தொடக்கம் மட்டுமே” என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் புரட்சி ஏற்பட்டிருப்பதை அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும், வணக்கம்.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே. அதீத அனுபவசாலிகளுக்கானது மட்டுமே. பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது மட்டுமே. இப்படி அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜாலக்…
— TVK Vijay (@TVKVijayHQ) April 24, 2026
குறிப்பாக, வாக்குப்பதிவு செய்யத் தங்கள் குடும்பத்தினரை உற்சாகப்படுத்தி அழைத்துச் சென்ற சிறுவர், சிறுமியர்களுக்கு விஜய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். “நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்” என அவர் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குழந்தைகளிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
தவெக தலைவர், விஜய்யின் இந்தப் பதிவு தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. “நம்பிக்கையோடு இருப்போம், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்ற அவரது வாசகங்கள் தேர்தல் முடிவுகளில் தவெக ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும் என்பதைக் காட்டுகின்றன. 1951-க்குப் பிறகு பதிவான இந்த உச்சபட்ச வாக்குப்பதிவு, விஜய்யின் அரசியல் வருகைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.