தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி என்பது ஆளுங்கட்சியான திமுக-விற்கும் தனது தவெக-விற்கும் இடையிலான நேரடிப் போட்டிதான் என்று பிரகடனம் செய்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், தமிழக அரசியல் களம் நான்கு முனைப் போட்டியாகச் சிதறிக் கிடக்கவில்லை என்றும், மக்கள் விரோத ஸ்டாலின் அரசு வேண்டுமா? அல்லது மக்கள் மீது அன்புகொண்ட விஜய்யின் ஆட்சி வேண்டுமா? என்பதுதான் ஒரே கேள்வி என்றும் ஆவேசமாக முழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சிக்கான திட்டத்தை விஜய் வெளியிட்டார். தவெக ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சகம் (Ministry of AI) உருவாக்கப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். இதற்காகத் தனி “ஏஐ சிட்டி” மற்றும் “ஏஐ பல்கலைக்கழகம்” அமைக்கப்பட்டு, உலகளாவிய தொழில்நுட்பப் பொருளாதாரத்தில் தமிழகத்தின் பங்களிப்பை உறுதி செய்யப்படும் என்றார். 2035-க்குள் இந்தியாவிற்கு 1.7 டிரில்லியன் டாலர் பங்களிப்பை வழங்க இது உதவும் என்றும் அவர் மதிப்பீடு செய்தார்.

ஊழலை ஒழிப்பதற்கான அதிரடித் திட்டமாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் “தமிழ்நாடு குடிமக்கள் சலுகை அட்டை” (Citizen Privilege Card) வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்தார். இதன் மூலம் அரசு நலத்திட்டங்கள் இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் இன்றி நேரடியாக மக்களின் வீட்டு வாசலுக்கே வரும் என்று உறுதி அளித்தார். “இது ஸ்டாலின் சார் சொல்லும் கதைகளைப் போன்றது அல்ல; அறிவியல் ரீதியாகச் சாத்தியமான ஒன்று. தற்போதுள்ள நிர்வாகம் மக்களுக்குத் தொல்லை தரும் அமைப்பாகவே உள்ளது, அந்தச் சங்கிலியை நாங்கள் உடைப்போம்,” என்று அவர் விமர்சித்தார்.
நிர்வாகச் சீர்திருத்தம் குறித்துப் பேசிய அவர், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” கொண்டு வரப்படும் என்றும், ரேஷன் கார்டு முதல் ஓட்டுநர் உரிமம் வரை அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க “வெற்றி தமிழ்நாடு” என்ற சூப்பர் ஆப் (Super App) அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறினார். தமிழகத்தின் கடன் சுமை 10.5 லட்சம் கோடியைக் கடந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு கடன் கடந்த 5 ஆண்டுகளில் வாங்கப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டத்தில் சைக்கிள் ஓட்டி தனது தொண்டர்களை விஜய் உற்சாகப்படுத்தினார். காரைக்குடி கூட்டத்தில் சைக்கிள் ஓட்டியபோது ஏற்பட்ட குளறுபடிகளைத் தவிர்க்க, இம்முறை முறையான பாதுகாப்பு வளையங்களுக்குள் அவர் சைக்கிள் பயணம் மேற்கொண்டார். 5 லட்சம் மக்களின் கையெழுத்து பெற்ற மனுக்கள் சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்ற “மக்கள் மன்றம்” (People’s Forum) திட்டத்தையும் முன்மொழிந்த விஜய்யின் இந்த டிஜிட்டல் ஜனநாயகப் பேச்சு, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





