பிரபல பின்தெக் (Fintech) நிறுவனமான ‘ரேஸ் பைனான்சியல் சர்வீசஸ்’ (Raise Financial Services) மற்றும் ‘தன்’ (Dhan) பங்கு வர்த்தக தளத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ பிரவீன் ஜாதவ், முன்னணி தனியார் வங்கி ஒன்று தனது ஹோம் லோன் (Home Loan) விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடிக்கும் மேல்) மதிப்புள்ள ஒரு பெரிய யூனிகார்ன் நிறுவனத்தின் அதிபருக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது ஒட்டுமொத்த தொழில்முனைவோர் உலகிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தனது எக்ஸ் (X) பக்கத்தில் இந்த அனுபவத்தை நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ள பிரவீன் ஜாதவ், “நிறுவனர்களின் (Founders) வாழ்க்கை மிகவும் கடினமானது. நான் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பவுண்டர் என்ற ஒரே காரணத்திற்காக முன்னணி தனியார் வங்கி எனது ஹோம் லோன் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால், இதே வங்கிதான் சில காலத்திற்கு முன்பு என்னை நாட்டின் மிகச்சிறந்த பின்தெக் கண்டுபிடிப்பாளர் (Top Fintech Innovator) என்று பாராட்டி கௌரவித்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Founder’s life is hard!
My home loan application got rejected by a top private bank – just because I am a founder.
> 25 years+ of customer
> ~800 CIBIL Score
> 5x-6x of loan value in relationship with this bank
> may be in top 0.1% of its customers by assets
> and irony is this…— pj (@BeingPractical) July 14, 2026
வங்கியின் இந்த முடிவை விமர்சித்த அவர் தனது தகுதிகளையும் பட்டியலிட்டுள்ளார். “நான் இந்த வங்கியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக இருந்து வருகிறேன். சொத்துக்கள் மற்றும் வைப்புத்தொகை அடிப்படையில் அந்த வங்கியின் டாப் 0.1 சதவீத வாடிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். நான் கேட்கும் லோன் தொகையை விட 5 முதல் 6 மடங்கு அதிகமான தொகையை இந்த வங்கியிலேயே முதலீடாகவும் கணக்கிலும் வைத்துள்ளேன். எனது சிபில் (CIBIL) ஸ்கோரும் 800-க்கும் அதிகமாக மிகவும் வலுவாக உள்ளது. இவ்வளவு இருந்தும் நான் ஒரு பவுண்டர் என்பதால் எனக்கு கடன் வழங்க வங்கி மறுத்துவிட்டது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், “எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த வங்கி எளிதாக ஹோம் லோன் வழங்குகிறது. ஆனால், நிறுவனத்தை நடத்தும் எனக்கு வழங்க மறுக்கிறது. ஏனெனில், பவுண்டர்கள் அனைவரும் ‘அதிக ஆபத்துள்ள பிரிவில்’ (High-Risk Category) வருகிறார்களாம். இனி என் வாழ்நாள் முழுவதும் ஆபீசிலேயேதான் வாழ வேண்டும் போலிருக்கிறது” என்று வேதனையோடு நகைச்சுவையாகக் பதிவிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் பவுண்டர்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில் காட்டும் பாரபட்சம் குறித்த புதிய விவாதத்தையும் கிளப்பியுள்ளது.





