தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிகளில் (MCC) முக்கியத் தளர்வுகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பறக்கும் படைகள் (FST Flying Squad Team) மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்கள் (SST Static Surveillance Team) உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவின் போது, பறக்கும் படைகள் மேற்கொண்ட தீவிர சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் வணிகப் போக்குவரத்துகளில் இருந்த கெடுபிடிகள் தளர்ந்துள்ளன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இதுவரை எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு நடத்துவதற்கான அவசியம் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது தேர்தல் அமைதியாக நடந்ததைக் காட்டுகிறது.
வாக்கு எண்ணிக்கை மையங்களைப் பொறுத்தவரை, தமிழகம் முழுவதும் மொத்தம் 62 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் காப்பறைகளுக்குத் துணை ராணுவம் மற்றும் மாநிலப் போலீசார் இணைந்து 3 அடுக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த மையங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, முதற்கட்ட பாதுகாப்பில் மத்தியத் துணை ராணுவப் படையினரும், இரண்டாம் கட்டத்தில் ஆயுதப்படை போலீசாரும், வெளிவட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்தத் தீவிர பாதுகாப்பு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்பட்டாலும், வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றித் தடை உத்தரவுகள் மற்றும் கூடுதல் கண்காணிப்பு நிலவும் எனத் தெரிகிறது.