Medical Miracle in UP: 5 நாட்களில் 4 குழந்தைகள்; அறுவை சிகிச்சை இன்றி அபூர்வ சுகப்பிரசவம் – வியப்பில் ஆழ்ந்த மருத்துவர்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அமீனா என்ற பெண்ணிற்கு மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரு அபூர்வ பிரசவம் நிகழ்ந்துள்ளது. மொராதாபாத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவமனையில் (TMU) அனுமதிக்கப்பட்ட அமீனா, நான்கு குழந்தைகளை (இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள்) ஐந்து நாட்கள் இடைவெளியில் சுகப்பிரசவம் மூலம் ஈன்றெடுத்துள்ளார்.

பொதுவாக நான்கு குழந்தைகள் ஒரே கருப்பையில் வளரும்போது, அறுவை சிகிச்சை (C-Section) மூலமே பிரசவம் நடத்தப்படும். ஆனால், அமீனாவிற்கு நான்கு குழந்தைகளும் இயற்கையான முறையில் பிறந்திருப்பது மருத்துவ வல்லுநர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரம்பத்தில் ஸ்கேன் பரிசோதனையில் நான்கு கருக்கள் இருப்பதை அறிந்த மருத்துவர்கள், தாயின் ஆரோக்கியம் கருதி கருக்களின் எண்ணிக்கையைக் குறைக்க அறிவுறுத்தினர். ஆனால், அமீனாவின் குடும்பத்தினர் நான்கு குழந்தைகளையும் பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.

கடந்த மே 8-ஆம் தேதி அமீனாவிற்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மே 9-ஆம் தேதி அவர் தனது முதல் ஆண் குழந்தையைச் சுகப்பிரசவம் மூலம் பெற்றெடுத்தார். பிரசவத்தில் சிக்கல்கள் இருந்ததால், மற்ற குழந்தைகளின் பிறப்பை மருத்துவர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்தனர். சரியாக ஐந்து நாட்களுக்குப் பிறகு, மே 14-ஆம் தேதி மீண்டும் வலி ஏற்பட்ட நிலையில், மற்ற மூன்று குழந்தைகளும் அடுத்தடுத்து சுகப்பிரசவம் மூலம் பிறந்தன.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "DM அங்கிள், நீங்க ரொம்ப நல்லவர்!" சேறும் சகதியுமான சாலையைச் சீரமைக்கக் கோரிய 6 வயது சிறுமி; வீடியோ வைரலானதும் பறந்து வந்த அதிகாரிகள்!

தற்போது அமீனா மற்றும் அவரது நான்கு குழந்தைகளும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இத்தகைய சிக்கலான பிரசவத்தைச் சுகப்பிரசவம் மூலம் வெற்றிகரமாக முடித்தது மருத்துவ உலகின் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

இந்த அதிசய நிகழ்வு குறித்து அறிந்த பலரும் அமீனாவிற்கும், அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவிற்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மருத்துவ அறிவியலில் மிகவும் அரிதாகக் கருதப்படும் இந்தச் சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.