இணையதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலானாலும், சில வீடியோக்கள் நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த ஒரு இறுதிச்சடங்கு நிகழ்ச்சி தற்போது உலக அளவில் ‘ட்ரெண்டிங்’ ஆகி வருகிறது. உயிரிழந்த ஒருவரின் கடைசி ஆசைக்காக, அவரது சவப்பெட்டிக்கு முன்பாகவே இளம்பெண்கள் குத்தாட்டம் (Coyote Dancers) ஆடியதுதான் இந்த விவாதத்திற்குப் புள்ளி வைத்துள்ளது.
தாய்லாந்தின் நக்ரோன் சி தம்மரத் மாகாணத்தைச் சேர்ந்த 59 வயதான வினிஜ் என்பவர், தான் இறப்பதற்கு முன்பாகத் தனது குடும்பத்தாரிடம் ஒரு வினோத வேண்டுகோளை விடுத்திருந்தார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவர், “நான் இறந்த பிறகு யாரும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது. என் பிரிவை ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாட வேண்டும். குறிப்பாக என் சவப்பெட்டிக்கு முன்னால் டான்சர்களை வைத்து நடனமாடச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, தங்களின் துக்கத்தை மனதிற்குள் புதைத்துக்கொண்ட குடும்பத்தினர், வினிஜின் கடைசி ஆசையைத் துல்லியமாக நிறைவேற்றினர். பௌத்த முறைப்படி சடங்குகள் நடந்துகொண்டிருந்த போதே, பெரிய ஸ்பீக்கர்களில் அதிரடி இசை ஒலிக்க, மூன்று இளம்பெண்கள் வண்ணமயமான உடையில் நடனமாடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றது.
இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையவாசிகள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “ஒருவரின் கடைசி ஆசையை மதிக்க வேண்டும்” என ஒரு தரப்பினர் கூறினாலும், “புனிதமான கோவில்களில் இதுபோன்ற நடனங்கள் தேவையா?” என மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ, மரணத்தைக் கூடப் புன்னகையோடு வழியனுப்பச் சொன்ன வினிஜின் இந்தச் செயல், 2026-ன் மிகவும் வினோதமான வைரல் செய்திகளில் ஒன்றாக மாறியுள்ளது.