மகாராஷ்டிரா மாநிலம் தூளே பகுதியில் 18 வயது மாணவி சஞ்சீவனி வரடே மாயமான சம்பவம், தற்போது ஒரு மர்மத் திரைப்படத்தைப் போல இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சகஜீவன் நகர் பகுதியில் வசித்து வந்த இவர், கடந்த ஏப்ரல் 17 அன்று பட்டப்பகலில் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு இதுவரை வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை உறைய வைக்கும் வகையில் உள்ளன.
அந்த வைரல் வீடியோவில், சஞ்சீவனி தனது வீட்டை விட்டு வெளியே வரும்போது மிகவும் பயந்த நிலையில் காணப்படுகிறார். திடீரென ஒரு முதியவர் அவரைக் கடந்து செல்ல, அதன் பிறகு சஞ்சீவனியின் நடத்தையில் வினோத மாற்றம் ஏற்படுகிறது. அவர் தனது ஒரு கையை யாரோ பிடித்து இழுத்துச் செல்வது போலக் காற்றில் உயர்த்தியபடி, ஒருவித ‘வசிய’ நிலையில் (Trance state) நடக்கத் தொடங்குகிறார். யாரோ கண்ணுக்குத் தெரியாத நபர் அவரை வழிநடத்துவது போல இருக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
🚨Mysterious Disappearance in Dhule: 18 Year Old Sanjivani Varade Missing
Incident: 18 year old Sanjivani Varade went missing from Sahjivan Nagar, Dhule.
CCTV footage shows her leaving home with unusual behavior, sparking suspicions of hypnosis.
Police have launched an… pic.twitter.com/CZWw2h7xIs
— Ramesh Tiwari (@rameshofficial0) April 17, 2026
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், இது ‘ஹிப்னாஸிஸ்’ (Hypnosis) அல்லது வசியக்கலை மூலம் செய்யப்பட்ட கடத்தலாக இருக்கலாம் என அஞ்சுகின்றனர். அந்த முதியவர் மாணவியைத் தொட்டாரா அல்லது ஏதேனும் மந்திரம் ஓதினாரா என்ற விவாதங்கள் இணையத்தில் சூடுபிடித்துள்ளன. கடத்தலின் இந்தப் புதிய பாணி பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், இந்த ‘அமானுஷ்ய’ சந்தேகங்களை மறுத்துள்ள தூளே போலீசார், மாணவியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். “சிசிடிவி காட்சிகள் மர்மமாக இருந்தாலும், பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம். தொழில்நுட்ப ரீதியாக இந்த வழக்கைப் புலனாய்வு செய்து வருகிறோம்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த மர்ம முதியவர் யார் என்பது குறித்தும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மாயமான சஞ்சீவனியின் மொபைல் சிக்னல் மற்றும் கடைசி நடமாட்டத்தை வைத்துத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த மர்ம வீடியோவின் பின்னணி என்ன? என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை இந்த ‘வைரல் மர்மம்’ சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.





