தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை (தவெக) ஆட்சியமைக்க அழைக்க ஆளுநர் தாமதிப்பதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சிக்கு பாராட்டு:
தமிழக மக்கள் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை வழங்காத நிலையில், “மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்று அறிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியைத் தான் மதிப்பதாகக் கமல் குறிப்பிட்டுள்ளார்.
ஆளுநரின் அரசியலமைப்புக் கடமை:
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கமல் சாடியுள்ளார். “233 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மாநிலத்திற்கு நேரும் அவமானம். இது மக்களாட்சிக்கு ஏற்படும் சேதம்” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை மக்கள் எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. இந்த முடிவு தமிழ்நாட்டு வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாதது.
என் சகோதரர் திரு. @mkstalin அவர்கள் ‘மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்; பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்’ என்று…
— Kamal Haasan (@ikamalhaasan) May 7, 2026
எஸ்.ஆர். பொம்மை வழக்கின் முக்கியத்துவம்:
உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க எஸ்.ஆர். பொம்மை வழக்கைச் சுட்டிக்காட்டிய கமல் ஹாசன், “பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இதை அரசியலமைப்பு பொறுப்பில் இருப்பவர்களுக்கு நினைவூட்டுகிறேன்” என்று ஆளுநருக்குச் சட்ட ரீதியான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது கட்சி அரசியல் அல்ல, ஒரு குடிமகனின் கொள்கைக் குரல் என்று கூறியுள்ள கமல், தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்புக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் திருமாவளவன், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோரைத் தொடர்ந்து கமல் ஹாசனும் விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளது அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.





