“மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 3 முறை மனுக்கள் தள்ளுபடி ஏன்?” – சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடப்புக் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி நீர் உரிமை தொடர்பான விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பிய நிலையில், அதற்குப் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலளித்துப் பேசியது பேரவையில் பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியது.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரித்து நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிராக முந்தைய மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்றம் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன் பின்னர், மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவும் (Curative Petition) உரிய மற்றும் வலுவான சட்ட வாதங்களை எடுத்து வைக்கத் தவறியதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மூன்று முறை உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் பின்னணி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளக்கமளிப்பாரா என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  "தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதலமைச்சர்!": மேகதாது விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் காரசாரமாக எக்ஸ் தளத்தில் நக்கலோ நக்கல்ஸ்!

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரி நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாகச் செயல்பட்டு வருகிறது என்றும், மேகதாது பகுதியில் புதிய அணை கட்டப்படுவதைத் தடுக்கத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ மற்றும் நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சட்டப் போராட்டத்தில் முந்தைய ஆட்சிக் காலத்தில் நேரிட்ட பின்னடைவுகளைச் சுட்டிக்காட்டி பேரவையில் நடைபெற்ற இந்த காரசார விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.