தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆளுங்கட்சியான திமுக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் மக்களின் தீர்ப்பை ஏற்று உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மக்களின் தீர்ப்பிற்குத் தலைவணக்கம்: மக்களின் தீர்ப்பைத் தான் தலைவணங்கி ஏற்பதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை உருவாக்கித் தமிழகத்திற்கு நல்லாட்சியை வழங்கியதாகவும், தங்களது சாதனைகளைச் சொல்லியே மக்களிடம் வாக்கு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையான உழைப்பு: “வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது மனச்சாட்சிப்படியும் சக்தியை மீறியும் உழைத்ததாகத் தெரிவித்துள்ளார். களத்தில் அவருடன் உழைத்த திமுக தொண்டர்களுக்கும், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைப் பகிர்ந்துள்ளார்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக்… pic.twitter.com/CCsVdwJX0A
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) May 4, 2026
எதிர்க்கட்சியாக புதிய பயணம்: தனது நீண்ட கால அரசியல் வாழ்வில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெற்றி தோல்விகளை விட இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியம் என்று கூறியுள்ளார். எனவே, திமுகவின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும் எனவும், இதுவரை சிறந்த ஆளும்கட்சியாகச் செயல்பட்ட திமுக, இனி சிறந்த எதிர்க்கட்சியாகச் செயல்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்குப் பின்னடைவாக அமைந்தாலும், ஜனநாயகக் கடமையைத் தொடர்ந்து ஆற்றுவோம் என்கிற ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.





