‘பாட்டிலில் சிறுநீர்.. வாய் துர்நாற்றத்திற்கு சாக்லேட் சாப்பிடு!’ அரசுப் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவிகளின் குடிநீர் பாட்டிலில் சிறுநீரைக் கலந்து குடிக்க வைத்த கொடூரமானச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குணா மாவட்டத்தின் அரொன் மேம்பாட்டுப் பிரிவில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. வகுப்பறையில் இருந்த மாணவிகளின் குடிநீர் பாட்டில்களை எடுத்த சக மாணவன் ஒருவன், அதில் அருவருக்கத்தக்க வகையில் சிறுநீரைக் கலந்து வைத்துள்ளான். இதை அறியாமல் தண்ணீரைக் குடித்த மாணவிகளுக்குத் துர்நாற்றமும் அருவருப்பான சுவையும் தெரியவந்ததை அடுத்து, அவர்கள் உடனடியாக இது குறித்துப் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கதறிப்ழுது புகார் அளித்துள்ளனர்.

ஆனால், மாணவிகளின் புகாரைக் கேட்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டிய பள்ளி தலைமை ஆசிரியர், மிகவும் அலட்சியமாகவும் மனிதத்தன்மையற்ற முறையிலும் நடந்து கொண்டுள்ளார். “வாய் துர்நாற்றமாக இருந்தால் ₹10 ரூபாய்க்குச் சாக்லேட் வாங்கிச் சாப்பிடுங்கள்; இந்த விஷயத்தைப் பெரியதாக்க வேண்டாம்” என்று கூறி புகாரை அசட்டையாகத் தள்ளிவிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியரின் இந்த அதிர்ச்சிகரமான பதிலைக் கேட்டு ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களும், உள்ளூர் கிராம மக்களும் செவ்வாய்க்கிழமை பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டுப் பூட்டுப்போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றத்தில் ஈடுபட்ட மாணவன் மற்றும் அதற்குத் துணையாக இருந்தவர்கள் மீதும், அலட்சியமாகச் செயல்பட்ட தலைமை ஆசிரியர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பெருமளவிலான போலீசாருடன் நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  'ராமர் கோவில் பிரசாதம்' என போலி விற்பனை! அமேசானுக்கு ரூ.1 லட்சம் அபராதம்... நுகர்வோர் ஆணையம் அதிரடி!

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த குணா மாவட்ட ஆட்சியர் கிஷோர் குமார் கன்யால், இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், குற்றம் சாட்டப்பட்ட மாணவனின் பெற்றோரும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் சில மாணவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இரண்டு நாட்களுக்குள் முழுமையான விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்கக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.