மத்திய அரசின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றான பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கான உச்ச வரம்பை அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. தற்பொழுது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் தங்களது தொழிலை மேம்படுத்தவும், புதிய உபகரணங்களை வாங்கவும் பிணையம் இல்லாமல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற முடியும். மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த புதிய மாற்றத்தின்படி, கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் கூடுதலாக ‘தருண் பிளஸ்’ (Tarun Plus) என்ற புதிய நான்காவது பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சிசு (Shishu – ரூ.50,000 வரை), கிஷோர் (Kishore – ரூ.5 லட்சம் வரை), தருண் (Tarun – ரூ.10 லட்சம் வரை) ஆகிய மூன்று பிரிவுகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன. தற்பொழுது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ‘தருண் பிளஸ்’ பிரிவின் கீழ் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், இவ்வளவு பெரிய தொகைக்கு விண்ணப்பிக்கும் போது எந்த ஒரு சொத்துப் பிணையமோ (Collateral) அல்லது ஜாமீனோ கேட்கப்பட மாட்டாது. இந்த கடன்களுக்கான முழு உத்தரவாதத்தையும் மத்திய அரசின் கீழ் இயங்கும் CGFMU நிறுவனம் வழங்குகிறது. இருப்பினும், இந்த ரூ.20 லட்சம் வரையிலான புதிய கடனைப் பெற ஒரு முக்கிய தகுதி தேவைப்படுகிறது. ஏற்கனவே முத்ரா திட்டத்தின் கீழ் ‘தருண்’ (Tarun) பிரிவில் கடன் பெற்று, அதை எந்த ஒரு நிலுவையும் இல்லாமல் முறையாகத் திருப்பிச் செலுத்திய தொழில்முனைவோர் மட்டுமே இப்புதிய ‘தருண் பிளஸ்’ கடனுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்.
உற்பத்தி, வர்த்தகம், சேவைத் துறை மற்றும் விவசாயம் சார்ந்த துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியான விண்ணப்பதாரர்கள் அரசு நடத்தும் ஜன் சமர்த் (JanSamarth) இணையதளம் அல்லது தங்களுக்கு அருகில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் மூலம் இந்த கடனைப் பெற விண்ணப்பிக்கலாம்.





