தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், இறுதி கட்டப் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதலமைச்சர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் இணைந்து இன்று (ஏப்ரல் 20, 2026) வடசென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தவுள்ளனர்.
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தளத்தில், “இன்னும் சற்றுநேரத்தில் நானும் சகோதரர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் வடசென்னையில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம்!” எனப் பதிவிட்டுள்ளார். இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அதற்குப் பதிலாகத் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு (SPA) தனது முழு ஆதரவை வழங்கியுள்ளது.
இன்னும் சற்றுநேரத்தில் நானும் சகோதரர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களும் வடசென்னையில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்கிறோம்!
In a short while, I, along with my brother Thiru. @ArvindKejriwal, will be meeting the people in North Chennai and seeking their support.#SayNoToNDA… pic.twitter.com/9E5pinURyP
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) April 20, 2026
முன்னதாகச் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “கல்வி, மருத்துவம் மற்றும் மகளிர் மேம்பாடு ஆகியவற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எனது பார்வை ஒன்றாக உள்ளது. தமிழக மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைப்பதில் ஸ்டாலின் அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க ஆட்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்தார். இருவரும் இணைந்து வடசென்னை பகுதிகளில் வாக்கு சேகரிப்பது, அப்பகுதி வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், வடசென்னையில் இவர்களின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணா நகர், வில்லிவாக்கம் ஆகிய இடங்களைத் தொடர்ந்து, வடசென்னையின் குறுகலான சந்துகளிலும் இவர்களது பிரச்சார வாகனம் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் கவனம் பெற்றுள்ள இக்கூட்டணியின் பிரச்சாரம், 2026 தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பை மேலும் உறுதிப்படுத்தும் எனத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.