பெட்ரோலில் 20 விழுக்காட்டிற்கும் மேல் எத்தனால் கலப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்று பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தபோது அவர் இந்த முக்கியமான விளக்கத்தை அளித்தார்.
இந்தியாவில் பெட்ரோலில் எத்தனால் கலக்கும் நடைமுறை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருந்து வருகிறது. கடந்த 2013-14-ஆம் நிதியாண்டில் சராசரியாக 1.53 சதவீதமாக மட்டுமே இருந்த எத்தனால் கலப்பு, மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால் 2025-26-ஆம் நிதியாண்டில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பது தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்தியா 5 ஆண்டுகள் முன்கூட்டியே வெற்றிகரமாக எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.





