தமிழ்நாட்டின் குடிநீர் மற்றும் விவசாயப் பாசனத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, கோதாவரி – காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், அதற்கு ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்ற அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். மாநிலத்தின் நீர் ஆதாரத்தை உயர்த்தும் நோக்கில் இந்த நகர்வு அமைந்திருந்தாலும், இது தற்போதைய அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான கருத்து மோதலை உருவாக்கியுள்ளது.
முதலமைச்சரின் இந்த நடவடிக்கை தொடர்பாக விமர்சனம் வைக்கும் திமுக ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள், “மத்திய அரசிடம் நேரடியாகச் சென்று அரசியல் அழுத்தம் கொடுக்காமல், வெறும் கடிதங்களை மட்டுமே அனுப்பிவிட்டுத் தன் கடமை முடிந்துவிட்டதாக முதலமைச்சர் விஜய் காட்டிக்கொள்ள முயல்கிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். “மாநில உரிமைகளுக்காகவும் நிதி ஒதுக்கீட்டிற்காகவும் டெல்லியில் நேரில் நின்று போராடாமல், கடித அரசியல் நடத்துவது எந்த மாற்றத்தையும் தராது” என்றும் “ஆளுமைமிக்க நிர்வாகக் குரலாகச் செயல்படுவதை விட்டுவிட்டு, அறிக்கைகள் வாயிலாக மட்டுமே ஆட்சி நடத்த முயல்கிறார்கள்” என்றும் திமுக தரப்பினர் கடுமையாகத் விமர்சித்து வருகின்றனர்.
இதற்குப் பதிலடி கொடுத்து வரும் தவெக ஆதரவாளர்கள், “கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் நதிகள் இணைப்புத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டுத் தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தை வீணடித்தனர். ஆனால், முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தின் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிதி மற்றும் தேசிய அந்தஸ்தைப் பெறத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகவும் தர்க்கரீதியாகவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்” எனக் கூறி எதிர்த்தரப்பின் விமர்சனங்களை மறுத்து வருகின்றனர்.
வெள்ள உபரி நீரைச் சேமித்து வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பிவிடும் இந்த முக்கியத் திட்டத்தில், கடிதம் எழுதியதன் மூலம் மத்திய அரசை நோக்கிப் பந்தை நகர்த்தியுள்ளதாகத் தவெகவினர் வாதிடும் அதேவேளையில், “இது வெறும் அரசியல் விளம்பர உத்திதான்” எனத் திமுகவினர் வாதிட்டு வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களிலும் அரசியல் களத்திலும் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையேயான காரசாரமான விவாதம் தற்சமயம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.





