இனி 15 நாட்களில் பட்டா மாறுதல்! சாப்ட்வேரில் வந்த அதிரடி மாற்றம் – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்!

தமிழகத்தில் பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த இணையவழி உட்பிரிவில்லாத தானியங்கி பட்டா மாறுதல் சேவை தற்போது மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இனிமேல் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சொத்துக்களைப் பதிவு செய்த பிறகு, வெறும் 15 நாட்களுக்குள் தானியங்கி முறையில் பட்டா மாறுதல் ஆணை பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக வருவாய் துறையின் இணையவழி பட்டா மாறுதல் மென்பொருள் முழுமையாக அப்டேட் செய்யப்பட்டு, புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

வருவாய்த்துறையைப் பொறுத்தவரை ஒரு நில உரிமையாளரின் சொத்துக்கான மிக முக்கிய ஆவணமாக பட்டா கருதப்படுகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் சென்று ஆவணங்களைச் சரிபார்த்து இணையவழி பட்டா பெறுவதற்கான நடைமுறைகள் ஏற்கனவே இருந்தாலும், அதில் பயன்படுத்தப்பட்டு வந்த சாப்ட்வேர் அதற்கு ஏதுவாக இல்லாததால் ஆன்லைன் பட்டா மாறுதலில் பல்வேறு நடைமுறை இடர்பாடுகளும், காலதாமதமும் ஏற்பட்டு வந்தன. குறிப்பாக, ஒரு நிலத்தை விற்பனை செய்யும்போது விற்பனையாளருடைய மனைவி, மகன் அல்லது மகள் போன்ற குடும்ப உறுப்பினர்கள் கூட்டுப் பட்டாதாரர்களாக இருந்து கையெழுத்திடும் பட்சத்தில், அந்த கோப்புகளை பழைய மென்பொருளில் கையாள முடியாத நிலை நீடித்து வந்தது.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  டாஸ்மாக்கில் இனி ₹10 கூடுதல் கிடையாது! ஊழியர்களின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் விக்னேஷ்!

அதேபோல, நில உரிமையாளர் ஒருவருக்கு பொது அதிகாரப் பத்திரம் கொடுத்து, அதன் மூலம் நிலம் விற்பனை செய்யப்படும்போதும் பழைய மென்பொருளில் சிக்கல்கள் நீடித்தன. விற்பனை செய்பவரின் பெயருக்கும், பட்டாதாரரின் பெயருக்கும் இடையே உள்ள சிறு முரண்பாடுகளைக்கூட பழைய சாப்ட்வேரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும், நிலம் வாங்குபவர் அதே கிராமத்தில் வேறு ஏதேனும் நிலம் வைத்துள்ளாரா என்பதைத் தேடித் தகவல்களைச் சேகரிப்பதற்கும் மென்பொருளில் அதிக கால அவகாசம் தேவைப்பட்டது. பொதுமக்களின் இந்த நீண்ட நாள் குறையைப் போக்கும் வகையில், தற்போது புதிய மென்பொருள் மேம்பாட்டின் கீழ் குடும்ப உறுப்பினர்களின் கூட்டு ஆவணங்களையும், பவர் ஆப் அட்டர்னி முறையையும் எளிதாக ஏற்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சார் பதிவாளர் அலுவலகத்தில் உட்பிரிவு இல்லாத நிலங்கள் பதிவு செய்யப்பட்டவுடன், அந்த விபரங்கள் நேரடியாக வருவாய்த்துறை மென்பொருளுக்கு மாற்றப்பட்டு, மனிதத் தலையீடின்றி தானியங்கி முறையில் 15 நாட்களுக்குள் பட்டா மாறுதல் செயலாக்கப்பட்டு பொதுமக்கள் கைகளில் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது.