மலையாள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையைக் கொண்டாடத் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகளுக்கு மத்திய அரசு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கேரள மக்கள் எவ்வித சிரமமும் இன்றி தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று வர ஏதுவாக, இந்திய ரயில்வே துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் (Special Trains) இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் இருந்து கேரளாவுக்கு இந்தப் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து அவர் பேசுகையில், ஓணம் பண்டிகை காலத்தில் ஏற்படும் கடுமையான கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கும், மக்களுக்கு எவ்வித தடங்கலும் இல்லாத பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்கும் ரயில்வே துறை முழு உத்தரவாதம் அளிக்கிறது என்றார். பயணிகளின் வசதிக்காகக் கூடுதல் ரயில்கள் மட்டுமன்றி, முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பும், மருத்துவ வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஓணம் சிறப்பு ரயில்களுக்கான முழுமையான கால அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு விவரங்கள் விரைவில் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.





