நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள ‘நீட் மறுதேர்வு’ (NEET Re-exam) மற்றும் ‘டெலிகிராம் செயலி தடை’ விவகாரம் தொடர்பாகத் டெல்லி உயர்நீதிமன்றத்தில் (Delhi High Court) நடைபெற்று வரும் முக்கிய வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு தங்களது அதிரடியான விளக்கங்களை பிரமாணப் பத்திரமாகத் (Affidavit) தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சம்பவத்தின் போது, வினாத்தாள்கள் மற்றும் முறைகேடான தகவல்கள் அனைத்தும் டெலிகிராம் மூலமாகவே பெருமளவில் பகிரப்பட்டதாகத் தேசிய தேர்வு முகமை (NTA) கண்டறிந்தது. இதனைத் தொடர்ந்து, நீட் மறுதேர்வின் போது மீண்டும் எந்தவொரு குளறுபடிகளும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தியாவில் டெலிகிராம் செயலி தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நீதிமன்றத்தில் மத்திய அரசு இதற்கான பின்னணிக் காரணங்களை உடைத்துள்ளது.
மத்திய அரசின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா (Solicitor General Tushar Mehta) நீதிமன்றத்தில் வாதாடுகையில், “இது மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நீட் தேர்வின் நம்பகத்தன்மையைக் காப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கை (Temporary Measure) மட்டுமே. மற்ற சமூக ஊடக செயலிகளில் இல்லாத சில ஆபத்தான அம்சங்கள் டெலிகிராமில் உள்ளன. குறிப்பாக, டெலிகிராமில் ஒரு பதிவை (Message Post) அனுப்பிய பிறகு, அதன் தேதியை மாற்றியமைக்கக் கூடிய ‘பேக்-டேட்’ (Back-date) அம்சம் உள்ளது. உதாரணத்திற்கு ஜூன் 22 அன்று பகிரப்பட்ட ஒரு போலி வினாத்தாளை, ஜூன் 21 அன்றே கசிந்தது போலத் தேதியை மாற்றி மாணவர்களிடையே திட்டமிட்டுப் பரப்ப முடியும். இத்தகைய தவறான தகவல்களால் லட்சக்கணக்கான மாணவர்கள் குழப்பமடைந்து வீதிக்கு வந்து போராடும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அபாயம் உள்ளது” என்று அடுக்கினார்.
மேலும், கடந்த மே மாதத்தில் இருந்தே டெலிகிராம் செயலி மூலம் பல்வேறு முறைகேடான குரூப்கள், சாட் பாட்டுகள் (Bots) வழியாகத் தேர்வுப் பொருட்கள் சட்டவிரோதமாகப் புழங்கி வந்ததை அரசு கண்காணித்து வந்துள்ளது. இதுதொடர்பாக டெலிகிராம் நிறுவனத்திற்குப் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், பிற சமூக ஊடக நிறுவனங்களைப் போல டெலிகிராம் இந்திய அரசுடன் இணைந்து செயல்படவோ அல்லது உரியத் தகவல்களை வழங்கி ஒத்துழைக்கவோ மறுத்துவிட்டது. தொடக்கத்தில் மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளையே அரசு விதித்தது; ஆனால் நிறுவனத்தின் ஒத்துழைப்பின்மை மற்றும் தேர்வுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டது. நீட் மறுதேர்வு முடியும் வரை இந்தத் தற்காலிகத் தடை நீடிக்கும் என்று மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.





