தமிழ்நாட்டில் அனைத்து வகை விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு உள்கட்டமைப்புகளை சர்வதேச நிலைக்கு உயர்த்தும் வகையிலும் தமிழக சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டார். குறிப்பாக, சென்னையில் சர்வதேசத் தரத்திலான ‘ஒலிம்பிக் சிட்டி’ மற்றும் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ (Motor Sports City) அமைக்கப்படும் என்ற அறிவிப்பு விளையாட்டு பிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் முன்னணி நடிகர் அஜித் குமார், முதலமைச்சர் விஜய்யின் இந்த விளையாட்டுத்துறை தொலைநோக்கு திட்டத்திற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
தனது அறிக்கையில் அஜித் குமார் கூறியிருப்பதாவது: “விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்களை அறிவித்து, மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட ஒவ்வொரு விளையாட்டு துறைக்கும் தேவையான முக்கியத்துவத்தை அளித்ததற்காக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ஒருவனாக, விண்வெளி வீரர் திரு. நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற பொன்மொழியை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்: ‘தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த ஒரு சிறு அடி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்!’ (One small step by the Tamil Nadu govt, one giant leap for motorsports in India!).
மாண்புமிகு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்களின் அனைத்து புதிய முயற்சிகளும் சிறக்கவும் வெற்றிபெறவும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரங்களாகத் திகழும் இருவரின் இந்த ஆரோக்கியமான நட்பும் பரஸ்பர மரியாதையும் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.





