மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதித்து வரும் நீட் தேர்வு முறையை நாட்டில் இருந்து அறவே அகற்ற வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற நிலைப்பாடு எனத் த.வெ.க தலைவர் விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நீட் விவகாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றும் வாக்கு அரசியலைத் தங்களது கட்சி ஒருபோதும் செய்யாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் ஒன்றிய அரசு உரிய மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நீட் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமானால், முதன்மை நடவடிக்கையாகக் கல்வியை மீண்டும் அரசியல்சாசனத்தின் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதுவே இச்சிக்கலுக்கு ஒரே நிரந்தரத் தீர்வாக அமையும் என்றும் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். ஒருவேளை கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் நீடித்தால், அதற்கு இடைக்காலத் தீர்வாக ‘சிறப்புப் பொதுப் பட்டியல்’ (Special Concurrent List) ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்விசார் அதிகாரங்களையும் மாநில அரசுகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களைக் சுட்டிக்காட்டியுள்ள விஜய், இப்போராட்டங்களின் போது மேற்கொள்ளப்படும் ஜனநாயகத்திற்கு எதிரான அடக்குமுறைகளுக்கும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ள அவர், கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கல்வி உரிமைகளுக்காகத் த.வெ.க குரல் கொடுத்து வருவதை நினைவு கூர்ந்துள்ளார்.





