தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் அளித்த விளக்கம், தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய நகையாடலாகவும் சுவாரசிய விவாதமாகவும் உருவெடுத்துள்ளது. கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், “சட்டமன்றக் கதவைப் பூட்டினால் முதலமைச்சர் விஜய்யின் எலும்புகளை உடைப்போம்” என மிரட்டல் விடுத்து, தவெக அளித்த புகாரில் கைதாகிச் சிறை சென்று ஜாமீனில் வந்த மார்க்கண்டேயன், பேரவையில் முற்றிலும் இறங்கிவந்து பேசினார்.
“நீங்கள் முதலமைச்சரை இந்த அளவுக்குப் பேசியிருக்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அண்ணன் எனக்கு அன்போடு அறிவுரை சொன்னாரு. உணர்ச்சிவசப்பட்டு அறியாமல் வந்த அந்த வார்த்தைகளை அனைவரும் மன்னிச்சு மறந்துடுங்க” எனக் கூறி பேரவையில் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், மார்க்கண்டேயன் மன்னிப்பு கேட்டதை விட, அவருக்கு ‘பேச்சு நாகரிகம்’ குறித்து வகுப்பெடுத்த நபர் யார் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரிய ரகளையைக் கிளப்பியுள்ளது. சொந்த நாவ அடக்க முடியாமல், மேடைகளில் வரம்பு மீறிய அவதூறு மற்றும் ஏளனப் பேச்சுகளைப் பேசி, அடுத்தடுத்து வழக்குகளையும், விசாரணை முகமையின் நெருக்கடிகளையும், பொதுவெளியில் பெரும் எதிர்ப்புகளையும் சந்தித்தபடி நிற்கும் உதயநிதி ஸ்டாலின்தான் மார்க்கண்டேயனுக்கு “அமைதி பாடம்” நடத்தியுள்ளார்!
தானே வரிசையாகப் பல அவதூறு வழக்குகளில் சிக்கித் தவித்து வரும் சூழலில், தன் கட்சி எம்.எல்.ஏ-வுக்குக் நாகரிக அரசியல் குறித்து உதயநிதி வகுப்பு எடுத்தது திமுகவின் ஆகச்சிறந்த அரசியல் முரண்நகையாகப் பார்க்கப்படுகிறது. “முதலில் சொந்த நாவைக் கட்டுப்படுத்த முடியாதவர், மற்றவர்களுக்கு அமைதித் தூதுவராக உபதேசம் செய்கிறார்” எனத் தவெகவினர் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வாரிச்சுருட்டி வருகின்றனர்.
பேரவையில் கதறி விளக்கமளித்த மார்க்கண்டேயனின் பேச்சும், அவருக்கு ‘ஒழுக்க பாடம்’ கற்பித்த உதயநிதியின் குரு உபதேசமும் அரசியல் களத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்!





