கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்துச் சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், அண்மைக்காலமாகக் கார்ப்பரேட் உலகத்தில் அதிகரித்து வரும் ஒரு முக்கிய நடைமுறை குறித்துப் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருஷ்டி சார்தா (Srishti Sharda) என்ற பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், நிறுவனங்களில் ஒரு ஊழியர் ராஜினாமா செய்துவிட்டால் அவருக்குப் பதிலாகப் புதிய நபரை நியமிப்பதே இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மாறாக, விலகிய நபரின் வேலைகள் முழுவதையும் ஏற்கனவே பணியாற்றி வரும் சக ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுத்து விடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“ஒருவர் அலுவலகத்தில் இருந்து விலகினால் நிறுவனங்கள் ஏன் புதிய ஆட்களை நியமிப்பதில்லை? அதற்குப் பதிலாக அந்த வேலையை இருக்கும் ஊழியர்களுக்கே பிரித்துக் கொடுக்கின்றனர். இதன் மூலம் ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை தான் கிடைக்கிறதே தவிர, கூடுதல் சம்பள உயர்வோ, பாராட்டோ அல்லது பதவியுயர்வோ எதுவும் கிடைப்பதில்லை. அதே சம்பளத்தில் அதிக வேலை வாங்கும் இந்த நடைமுறை மிகவும் தவறானது” என அவர் அந்த வீடியோவில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
இந்தப் பதிவு வெளியான குறுகிய நேரத்திலேயே ஆயிரக்கணக்கான கார்ப்பரேட் ஊழியர்களின் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகிறது. பல பயனர்கள் கருத்துப் பெட்டியில், “இது தான் இன்றைய கார்ப்பரேட் வாழ்க்கையின் உண்மை நிலை” என்றும், “வேலை அதிகம் ஆனால் சம்பளம் அதே தான்” என்றும் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அனுபவம் வாய்ந்த ஒரு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் தனது யூடியூப் (YouTube) பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிறுவனங்கள் தற்காலிகச் செலவுகளைக் குறைக்க இத்தகைய குறுக்கு வழிகளைக் கையாள்வது ஊழியர்களின் மன அழுத்தத்தையும் பணித் திறனையும் கடுமையாகப் பாதிக்கும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.





