e-KYC: சமையல் எரிவாயு சிலிண்டர் இ-கே.ஒய்.சி: ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் பயன்பாட்டிற்கான ‘இ-கே.ஒய்.சி’ (e-KYC) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான எல்.பி.ஜி நுகர்வோர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்தியன் ஆயில் (இண்டேன்), பாரத் கேஸ் மற்றும் எச்பி கேஸ் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கு 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. போலி இணைப்புகளைக் கண்டறியவும், அரசு வழங்கும் மானியத் தொகையானது நேரடியாக உரியப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் சேர்வதை உறுதி செய்யவும், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் கார்டு அடிப்படையிலான ‘இ-கே.ஒய்.சி’ சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.

முன்னதாக, இந்த சரிபார்ப்புப் பணிகளை முடிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எரிவாயு முகவர் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதுடன், சர்வர் கோளாறுகள் காரணமாகப் பலரால் குறித்த நேரத்திற்குள் இ-கே.ஒய்.சி பணிகளை முடிக்க முடியாத சூழல் நிலவியது.

பொதுமக்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டும், இன்னும் பல நுகர்வோர்கள் கே.ஒய்.சி பணிகளை முடிக்காமல் உள்ளதைக் கவனத்தில் கொண்டும், இந்த அவகாசத்தை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  மேற்கு ஆசியப் போர்... எகிறிய கட்டுமானச் செலவு! வீடு வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த 4 மாத அவகாசம்!

வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய எரிவாயு முகவர் நிலையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் பிரத்யேக மொபைல் செயலிகள் மூலமாகவோ பயோமெட்ரிக் அல்லது முகம் சரிபார்க்கும் (Face Authentication) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாக இ-கே.ஒய்.சி முறையைப் பூர்த்தி செய்து கொள்ளலாம்.