“சுதந்திரப் போராட்டம் போல மீண்டும் ஒரு இயக்கம்!” CJP போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த பிரகாஷ் ராஜ்!

நீட் தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைக் கண்டித்து, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) சார்பாக புதுடெல்லியில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், பெங்களூருவில் தொடங்கிய போராட்டத்திலிருந்து டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ பேரணி வரை மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குத் தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், போராட்டக் களத்தில் நேரில் பங்கேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தைக் கையில் ஏந்தித் தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த உணர்ச்சிப்பூர்வமான பேரணியின் வீடியோ தொகுப்பைத் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரகாஷ் ராஜ், நாட்டின் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் போராடி வருவதாகவும், நம் நாட்டிற்குச் சுதந்திரப் போராட்டம் போன்ற மற்றொரு பிரம்மாண்ட இயக்கம் மீண்டும் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மாற்றத்திற்குத் தான் தொடர்ந்து ஆற்றலையும் பலத்தையும் அளித்து, மாணவர்களின் எதிர்காலத்திற்காக அவர்களுடன் கைகோர்த்து உறுதியோடு நிற்பேன் என்றும் அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

இப்போராட்டம் குறித்து பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் மௌனம் காப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், யார் யாருடன் நிற்கிறார்கள் என்பதை இந்த உலகம் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது என்று சாடினார். இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கங்களே ஒருவரின் நாணயத்தையும், அவர்கள் மக்களுக்காக நிற்பார்களா என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்றும், தவறு செய்தவர்களைக் கூட நாளை வரலாறு மன்னித்துவிடும் ஆனால் இக்கட்டான சூழலில் அமைதி காத்தவர்களை ஒருபோதும் மன்னிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இப்போராட்டத்தில் சபனா ஆஸ்மி, பூனம் பாண்டே போன்ற பிரபலங்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.