இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு நற்செய்தி! சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கட்டாயப் பங்களிப்புக்கான மாதச் சம்பள உச்சவரம்பை உயர்த்தி மத்திய அரசு மிக முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதுவரை மாதம் 15,000 ரூபாயாக இருந்த இந்த ஊதிய உச்சவரம்பு, தற்போது 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவின் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 51 லட்சம் புதிய ஊழியர்கள் கட்டாயச் சமூக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள். இதன் காரணமாக அவர்கள் வருங்கால வைப்பு நிதி (EPF), ஓய்வூதியத் திட்டம் (EPS) மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (EDLI) ஆகியவற்றின் பலன்களைப் பெற தகுதி பெறுவார்கள். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஊதிய உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருப்பது தனியார் துறை ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்ட விரிவாக்கத்தின் காரணமாக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 11,339 கோடி ரூபாய் நிதிச் செலவினம் ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. முறைசாரா மற்றும் குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களின் ஓய்வுக்கால பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூகப் பாதுகாப்பு திட்டங்களை விரிவுபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.